|

சுமார் 100 வருடங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில், இரணியல் என்னும் ஊரானது
மிக முக்கியமான பெரிய வியாபார ஸ்தலமாக இருந்துள்ளது. அப்போதைய இரணியல் கீழத்தெரு செட்டு
சமுதாய மக்கள் இவ்விடத்தில் ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலை எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர்.
பின்னர் நம்மக்கள் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப
படிப்படியாக நகரங்களுக்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில்
வாழ்ந்து வந்தாலும் நமது சமுதாய மக்கள் காவடி கெட்டு, ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன் கோவில்
சித்திரை ஆயில்ய கொழுக்கட்டை விழா போன்ற திருவிழாக்களுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து
கலந்து சிறப்பிப்பதோடு இறைவன் அருள்பெற்று செல்கின்றனர்.
விநாயகர் கோவிலில் தினமும் காலையும், மாலையும் இரு வேளை பூஜை மற்றும் பிரதோஷம்,
சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை மாதம் அனைத்து நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் சிறப்பு
பூஜைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் விநாயகர்சதுர்த்தி, வருஷாபிஷேகம் போன்ற வருட
விசேடங்களும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வைபவங்களிலும் நம் மக்கள் தங்களின்
பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில்
உள்ள தெக்கன்திருவிளை என்னும் ஊரில் அருள்மிகு ஒடுப்பறை நாகரம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் அருள் பாலிக்கும் நாகரம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். நாம் அம்மனிடம்
வேண்டுதல் செய்யும் காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். இக்கோவிலில் எல்லா ஞாயிற்றுக்கிழமை
களிலும், ஒவ்வொரு மாத ஆயில்ய நட்சத்திரத்தன்றும் , பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தன்றும்
மற்றும் கார்த்திகை மாதம் அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலிலிருந்து 0. 5 கி.மீ
தொலைவில் வள்ளியாற்றின் கரையருகில் குழிமியான்கோடு அருள்மிகு இசக்கி அம்மன் கோவில்
அமைந்துள்ளது. முன்பு இக்கோவிலில் மண்ணாலான திருவுருவ சிலைகள் வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
பின்பு காலப்போக்கில் இக்கோவில் இயற்கை சீற்றத்தால் நசிந்து தற்போது ஒரு மண்புற்று போன்று
காணப்படுகின்றது. இங்கு தற்போது கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன் கோவில், மற்றும் குழிமியான்கோடு அருள்மிகு இசக்கி அம்மன்
கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகர் கோவில் நிர்வாகிகளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
|